மாலத்தீவில் மேலும் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்

மாலே,

மாலத்தீவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது, சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார்.

இதனால், அவரை பதவி நீக்கும் நடவடிக்கையில் தலைமை நீதிபதி இறங்கினார். இதனை அடுத்து, கடந்த 5-ம் தேதி மாலத்தீவில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இன்று இரவுடன் அவசர நிலைக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் அப்துல்லா யாமீன் கோரிக்கைக்கு அந்நாட்டு பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்தையடுத்து அவசர நிலை மேலும் 30 நாட்கள்

நீட்டிக்கப்பட உள்ளதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதிபர் யாமீனின் கோரிக்கைக்கு ஆதரவாக 38 எம்.பிக்கள் ஆதரவு அளித்ததாகவும் அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் புறக்கணித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மாலத்தீவு அதிபரின் அவசர நிலை நீட்டிப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாலத்தீவு பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற 48 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வாக்கெடுப்பு நடைபெறும் போது, 48 எம்.பிக்கள் அவையில் கலந்து கொள்வார்கள் என்று ஆளும் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

-dailythanthi.com