ஜுன் 19-இல் சிலாங்கூருக்கு புதிய மந்திரி புசார்

சிலாங்கூரின்   புதிய   மந்திரி   புசார்   ஜூன்   19-இல்   பதவி   உறுதிமொழி    எடுத்துக்கொள்வார்   என  சிலாங்கூர்   அரண்மனை   ஓர்    அறிக்கையில்    கூறியது.

மந்திரி    புசாரின்   பதவி  ஏற்புச்  சடங்கை   ஹரி  ராயாவுக்குப்  பிறகு   வைத்துக்கொள்ள   மாநில   ஆட்சியாளர்    சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்    ஷா   இணக்கம்    தெரித்துள்ளதாக      அவரின்   தனிச்   செயலாளர்   முகம்மட்   மூனிர்   பானி   கூறினார்.

அச்சடங்கு   கிள்ளானில்,  இஸ்தானா  ஷா   ஆலமில்   நடைபெறும்.

“(புதிய   மந்திரி   புசார்)   பதவி   எற்கும்  அதே   நாளில்,  ஜூன்  19-இல், அஸ்மின்   அலி   சிலாங்கூர்   மந்திரி   புசார்   பதவியைத்   துறப்பார்”,  என்றும்   அவ்வறிக்கை   கூறியது.

ஆனால்,  அவருக்குப்   பதிலாக   மந்திரி   புசாராக   பதவி  ஏற்கப்போகிறவர்    யார்   என்பதை   அது  குறிப்பிடவில்லை.

இப்போதைக்கு  புக்கிட்   அந்தாராபங்சா   சட்டமன்ற    உறுப்பினர்    அஸ்மின்தான்  சிலாங்கூர்   மந்திரி   புசார்.   அவர்    இரண்டாம்   தவணைக்கு   சிலாங்கூர்   மந்திரி   புசாராக   மே  11-இல்    அப்பதவிக்கு    நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   அவரைப்  பொருளாதார   விவகார  அமைச்சராக   நியமித்ததால்     அஸ்மின்   மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலகி   மத்திய   அரசாங்கப்   பதவி   ஏற்கப்  போகிறார்.