அம்னோவிலிருந்து இன்னொரு எம்பி வெளியேறினார்

 

அம்னோ இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து விட்டது. புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹுசின் ஹபிஸ் சசைட் அப்துல் பசால் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பிரிவுகளின் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதனால் அம்னோவிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த ஏமாற்றம் என்னை புக்கிட் காந்தாங் தொகுதித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு இட்டுச் சென்றது என்றாரவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது முழு கவனத்தையும் அம்னோ அரசியல் தலையிடுதல் இல்லாமல் மக்களுக்குச் சேவையாற்றுவதில் செலுத்துவேன் என்று சைட் அபு கூறினார்.

இத்துடன், நான் அம்னோ மற்றும் பிஎன் ஆகியவற்றிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று அறிவிப்பதோடு நான் சுயேட்சையான நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்று சைட் அபு அறிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் அஸ்மி கஸாலியும் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அவர் பெர்சத்துவில் இணைய விரும்புவதாகவும் கூறினார்.