கொரிய போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை ஒப்படைத்த கிம்முக்கு டிரம்ப் நன்றி

வாஷிங்டன், வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடையே கடந்த 1950-1953ம் ஆண்டுகளில் கொரிய போர் நடந்தது.  இதில் சீனா ஆதரவுடன் வடகொரியாவும், அமெரிக்கா ஆதரவுடன் தென்கொரியாவும் மோதின.  இந்த போரில் உயிரிழந்த 55 அமெரிக்க வீரர்களின் உடல்களின் மீதங்களை கடந்த வாரம் வடகொரிய அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.

சிங்கப்பூரில் கடந்த ஜூனில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பினை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இதுபற்றிய முடிவானது கையெழுத்திடப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் இறந்த உடல்களின் மீதங்களை திரும்ப ஒப்படைக்கும் முதல் விசயம் ஆக இது உள்ளது.

கொரிய போரில் 7,700 அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.  அவர்களில் 5,300 பேரின் மீதங்கள் வடகொரியாவில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய தலைவர் கிம்முக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில், எங்களது அன்பு நிறைந்த வீரர்களின் உடல்களின் மீதங்களை திரும்ப ஒப்படைக்கும் பணியை தொடங்கி, உங்களது வாக்கினை நிறைவேற்றியதற்காக கிம் ஜாங் அன் அவர்களுக்கு நன்றி.  இந்த இரக்கமிக்க செயலை செய்ததற்காக நான் அதிக ஆச்சரியமடைந்தேன்.

உங்களது இனிய கடிதத்திற்காகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  உங்களை மீண்டும் காண வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

-dailythanthi.com