ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் பலி

திக்ரித், ஈராக் நாட்டில் பாக்தாத் நகரின் வடக்கே பைஜி மாவட்டத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் சிலர் ஹாம்ரின் மலை பகுதியில் இருந்து வந்து டைக்ரிஸ் ஆற்றை கடந்து அதன்பின்னர் இந்த சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.  6வது நபர் படுகாயமடைந்து உள்ளார்.  கொல்லப்பட்ட அனைவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் அல்-ஷாபி என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள்.

ஈராக் மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.  ஈராக்கின் மொசூல் நகர் முழுவதும் அவர்கள் கட்டுக்குள் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர்களை வெற்றி பெற்று விட்டோம் என ஈராக் அறிவித்தது.  ஆனால், ஹாம்ரின் மலை பகுதி போன்ற மக்கள் அடர்ந்த இடங்களில் தொடர்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

-dailythanthi.com