தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்துங்கள் – அமெரிக்காவுக்கு சீனா கண்டிப்பு

பீஜிங், நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 26–ந் தேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாகவும், இது தனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் புகார் கூறினார். இது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், பீஜிங் நகரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டிரம்பின் புகார் குறித்து கேள்வி எழுப்ப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘‘பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது சீன வெளியுறவுக்கொள்கையின் கலாசாரம் ஆகும். இது உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது’’ என்றார்.

மேலும், ‘‘எந்த நாடு, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் கூடுதலாக தலையிட்டு வருகிறது என்பதை சர்வதேச சமூகம் தெளிவாக அறிந்திருக்கிறது. தங்களது தேர்தலில் சீனா தலையிட முயற்சிக்கிறது என்பது போன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும் அமெரிக்கா முடிவு கட்ட வேண்டும்’’ என்றும் அவர் கூறினார்.

-dailythanthi.com