இண்டர்போல் தலைவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் – சீனா தகவல்..

மாயமான இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீன அரசு தெரிவித்துள்ளது.

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார்.

இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது.

இதற்கிடையே, இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேவை, விசாரணைக்காக சீன போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், விதிகளை மீறியது தொடர்பாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

-athirvu.in