பத்திரிக்கையாளர் கசோக்கியின் மரணத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்..

வாஷிங்டன்: சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதாக சவூதி ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, கசோக்கி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளதாக சவூதியின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் சாரா சாண்டரஸ், பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஐ.நா.வின் பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கசோக்கியின் கொலை மிகவும் துயரம் அளிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-athirvu.in