ஜாஹிட்: முகம்மட் ஹசான் ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார்

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

அங்கு புதிதாக தேர்தலை நடத்தும் தேர்தல் நீதிமன்றத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்..

“அம்னோ முகம்மட்டையே வேட்பாளராக நியமிக்கும். பிஎன் தேர்தல் இயந்திரம் களமிறக்கப்பட்டு முழு மூச்சாக செயல்படும்.

“எத்தனை இடர்கள் வந்தாலும் ரந்தாவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அம்னோ/பிஎன் கெளரவம் காக்கவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நம் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்”, என்றாரவர்.

அம்னோ துணைத் தலைவருமான முகம்மட், ஏப்ரல் 28-இல் பிகேஆர் வேட்பாளரான டாக்டர் ஸ்ரீராம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாத காரணத்தால் ரந்தாவில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இன்று காலை ஸ்ரீராமின் வாதத்தைச் செவிமடுத்த தேர்தல் நீதிமன்றம் ரந்தாவ் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்து அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது.