அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தடைப்படலாம்: எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் தற்போது நீடிக்கும் அரசியல் நெருக்கடி, இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு இடையூறாக அமையலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்றால் பிரதமர் பதவி விலகுவது வழமை. ஆனால், பெரும்பான்மையே இல்லாத மஹிந்த ராஜபக்ஷ சட்டத்திற்கு விரோதமான முறையில் பிரதமராக்கப்பட்டார். ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இல்லை.

எனினும், கட்சிகள் அவரால் தனது பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா என பொறுத்திருந்து பார்த்தன, பல பேரம்பேசல்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு பின்னரும் அவரால் பெரும்பான்மையை பெற முடியவில்லை.

கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன, இன்று உண்மையில் அரசாங்கம் என்பதேயில்லை. 14ஆம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அரசியலமைப்பு இதன் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது என தெரிவிக்கின்றது. தற்போது பலந்தமான அதிகாரத்தில் இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதுவே தற்போது இடம்பெறுகின்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அரசியல் தீர்வு விடயம் தடைப்படும் சாத்தியமுள்ளது. அரசியலமைப்பு தொடர்பான நகல்வடிவ ஆவணமொன்றை வெளியிடும் தருணத்தில் நாங்கள் இருந்தவேளையே இந்த குழப்பம் ஏற்பட்டது. அந்த ஆவணம் நவம்பர் ஏழாம் திகதி வெளிவரவிருந்தது. ஆனால், இந்த குழப்பங்கள் 26ஆம் திகதி ஆரம்பித்தன. இதன் காரணமாக அது முழுமையடையவில்லை.

புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் எதிர்காலத்தில் முன்னோக்கி நகர்வதற்கான வாய்புள்ளதாக நான் கருதவில்லை. எனினும், பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதி செய்ததை ஏற்காத நிலையில், ஜனாதிபதி என்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய தயார் என்பதை பொறுத்தே இது அமையும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: