கடற்படை கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா: யுக்ரைனில் ராணுவச் சட்டம்?

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரைன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து ராணுவச் சட்டம் கொண்டுவருவது குறித்து யுக்ரைன் நாடாளுமன்றம் ஆலோசிக்கவுள்ளது.

தங்களின் கப்பல்களில் ஒன்றை ரஷ்யா ஆக்ரோஷத்துடன் மோதியதாக யுக்ரைன் கூறுகிறது ஆனால் தங்கள் கடல் எல்லைக்குள் அவை நுழைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவிக்கிறது.

இதனைதொடர்ந்து யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஏறக்குறைய 150 பேர் திரண்டு இருந்தனர். அவர்கள் தீ பந்தங்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய தூதரகத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் தீயிலிட்டு கொளுத்தப்பட்டது.

கடற்படை கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா: யுக்ரேனில் போராட்டம் வெடித்தது

முன்னதாக, ரஷ்யா நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கடற்படை கப்பல்களில் இருந்த ஏராளமான யுக்ரைன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.

யுக்ரேனின் கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் பதற்றம் அதிகரிப்பு

திங்கள்கிழமையன்று தங்கள் நாட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ராணுவ சட்டம் குறித்து அந்நாட்டு எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தனது கடல் எல்லைக்குள் யுக்ரேன் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்துவிட்டதாக ரஷ்யா குற்றம்சாட்ட துவங்கியதில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்தது.

ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்திக்கு கீழே உள்ள ஒரு பாலத்தில் தனது டேங்கர் கப்பல்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.

அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதையாக கெர்ச் ஜலசந்தி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யுக்ரேனின் கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா

யுக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ரஷ்யாவின் நடவடிக்கைகளை தேவையற்றது மற்றும் பைத்தியகாரத்தனமானது என்று வர்ணித்துள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) 4 மணிக்கு (ஜிஎம்டி நேரம் ) ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டுமென ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தகவலை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி உறுதி செய்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷ்யாவால் இணைத்து கொள்ளப்பட்டு சர்ச்சையான க்ரைமியா தீபகற்பத்துக்கு அப்பால் உள்ள கருங்கடல் மற்றும் அஸோவ் கடல் பகுதிகளில் அண்மையில் பதட்டம் அதிகரித்துள்ளது.

ராணுவச் சட்டம்

ரஷியா

ராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்களின் போராட்டங்களை, ஒடுக்கவும், ஊடகங்களை ஒழுங்கமைக்கவும், தேர்தல்களை ரத்து செய்யவும், அரசாங்கத்துக்கு அதிகாரம் வரும்.

மேலும், 2014ஆம் ஆண்டு யுக்ரைன் ரஷ்யா சண்டை தொடங்கியதிலிருந்து ராணுவச் சட்டத்தை கொண்டு வருவது இது முதல்முறையாகவும் இருக்கும்.

ஆனால் இது 2019ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலை பாதிக்கும் எனவும், நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். -BBC_Tamil