தன் அதிகார ஆசையை மறைக்க முயல்கிறார் மஹிந்த

புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மஹிந்த  ராஜபக்ஷ இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்னார். நான் வேண்டாம் என்றேன். இரண்டாம் முறையும் வந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டேன். எங்கள் மீதான வழக்குகளை தடுக்கவே நான் பதவியை கைப்பற்றினேன் என இன்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை என மகிந்த கூறுவதுதான் உண்மை இல்லை.

இரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்ன போது அதை நான் ஏற்றுகொண்டதன் காரணம், ரணில் அரசாங்கம், ஒருபுதிய சமஷ்டி பிரிவினை அரசமைப்பு  ஒன்றை கொண்டுவர இருந்தது. அதை தடுக்கவே நான் பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று மகிந்த இன்று நடிகர் வடிவேலு மாதிரி நகைச்சுவை செய்கிறார்.

இத்தகைய ஒரு காரணத்தை கூறி, தன் பதவி ஆசையை மறைக்க மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்கிறார். பதவி அதிகாரத்தை பெற்று தங்கள் குடும்ப அங்கத்தவர் மீதான வழக்குகளை தடுக்க முயற்சி செய்வதை, இன்று மறைக்க வெட்கமில்லாமல், இனவாதத்தையும் தூண்டி விடும் கருத்தை கூறுகிறார்.

-tamilmirror.lk

TAGS: