சீனாவில் உறவினரின் டி.என்.ஏ மூலம் சிக்கிய ‘சீரியல் கில்லருக்கு’ மரண தண்டனை

சீனாவில் 1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 11 சிறுமிகள் மற்றும் பெண்களை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 53 வயது நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீன ஊடகங்களால், ‘ஜேக், தி ரிப்பர்’ (Jack the Ripper) என்று அழைக்கப்பட்ட காவோ செங்கியாங் கொலை செய்யும் முன்பு சிறுமிகள் மற்றும் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் வழிப்பறி செய்வது மட்டுமல்லாது அவர்களை பாலியல் வல்லுறவுக்கு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கொலை செய்த பின்னர் அவர்களின் தொண்டைப்பகுதியில் வெட்டியதுடன், இறந்த உடல்களையும் சிதைத்துள்ளார்.

கன்சூ மாகாணத்தில் உள்ள பய்யின் எனும் இடத்தில் அவர் நடத்திவந்த மளிகைக் கடையில் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பலரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே காவல்துறையினரால் இவரைக் கைது செய்ய முடிந்தது.

இவர் 2002ஆம் ஆண்டே கொலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது உறவினர் வேறொரு சிறு குற்றத்துக்கு கைதான பின்னரே இவரைப் பற்றிய துப்புக் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரி காவல்துறையிடம் ஏற்கனவே இருந்த டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போனது. அதை வைத்து கைது செய்யட்ட நபரின் உறவினர் ஒருவர்தான் தொடர் கொலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல் துறையினர் காவோ செங்கியாங்கை நெருங்கினர்.

முதல் கொலை

அவரது மகன் பிறந்த 1988ஆம் ஆண்டில் காவோ தனது முதல் கொலையை செய்துள்ளார்.

அப்போது 23 வயதாகும் பெண் ஒருவரின் உடல் 26 கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளையும் அவர் வெட்டி எடுத்ததாக பெய்ஜிங் யூத் டெய்லி எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரால் கொல்லப்பட்டவர்களிலேயே மிகவும் இளம் வயதுடைய சிறுமியின் வயது எட்டு.

இவரது தொடர் கொலைகளுக்கு பிறகு பய்யின் நகரத் தெருக்களில் தனியாக நடப்பதைப் பெண்கள் தவிர்த்தனர்.

பெரும்பாலும் துப்பாக்கியால் சுட்டு அல்லது நச்சை ஊசி மூலம் செலுத்தியே சீனாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும், வியாழனன்று காவோவுக்கு மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. -BBC_Tamil