வெனிசுவேலாவில் ஊடகவியலாளர் ஐவர் கைதாகினர்

ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காகப் போராடும் எதிர்க்கட்சிப் போராட்டங்களைப் பற்றி அறிக்கையிட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஐவரை, வெனிசுவேலா அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தவிர மேலும் இருவர், வெனிசுவேலாவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். இவர்களிருவரும் சிலியைச் சேர்ந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் இருவர் பிரான்ஸையும் மேலுமிருவர் கொலம்பியாவையும் மற்றையவர் ஸ்பெய்னையும் சேர்ந்தவர்களென அறிவிக்கப்படுகிறது.

கொலம்பியர்களும் ஸ்பெய்னைச் சேர்ந்தவரும், ஸ்பெய்னின் தேசிய செய்திச் சேவைக்காகப் பணியாற்றுபவர்கள் என அறிவிக்கப்படுகிறது. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் இருவரும், வெனிசுவேலா ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே படமெடுத்துக் கொண்டிருந்த போது தடுத்துவைக்கப்பட்டனர்.

-tamilmirror.lk