வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை?

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இராக் எல்லையில் உள்ள சிரியாவின் பக்கத்தில், ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் கடைசி பகுதியில் அமெரிக்க ஆதரவு குர்திய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் குர்திய படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ் சகாப்தம் சரிவதற்கு தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

“ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா விரும்பவில்லை. அங்கு ஊடுருவ வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். நாங்கள் நிறைய செய்கிறோம். அதிகமாக செலவு செய்கிறோம். இப்போது அடுத்தவர்களும் செய்வதற்கான காலம் வந்துவிட்டது. அவர்களிடம் அதற்கான திறனும் உள்ளது” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“இல்லையென்றால் அவர்களை விடுவிக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சிப்பாய்கள் ஐரோப்பிய நாடுகளை ஆபத்துக்கு அழைத்து செல்வார்கள் என்று அஞ்சுவதாக டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் டெலிகிராஃப் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்பின் இந்த கருத்தைதான் வெள்ளியன்று, பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை தலைவரும் தெரிவித்திருந்தார். சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு ஒடுக்கப்பட்டப்பின்னும். அந்த அமைப்பு மீண்டும் தன்னை புதுபித்து கொண்டே இருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும், ஜிகாதி குழுக்கள் ஆபத்தான திறமைகள் மற்றும் தொடர்புகளுடன் ஐரோப்பாவுக்குள் நுழைவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர், அந்த அமைப்பில் சேர்ந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அதேவேளையில் மீண்டும் தான் பிரிட்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் டிரம்பின் இந்த டிவீட் வெளியாகியுள்ளது.

அண்மை தகவல் என்ன?

ஐ எஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எவ்வாறு குறைந்தன என்பதை விளக்கும் படம்
ஐ எஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் எவ்வாறு குறைந்தன என்பதை விளக்கும் படம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று, “ஐஎஸ் அமைப்பு அடுத்த 24 மணிநேரத்தில் தோற்கடிப்பட்டது என்று அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால் 24 மணி நேரங்களை கடந்தபின்னும் வெள்ளை மாளிகையிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஆனால் இதுகுறித்து அறிவிப்பு வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குர்திய போராளிகள் தெரிவிக்கின்றனர்.

ஐஎஸ் தரப்பில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டாலும், இராக் மற்றும் சிரியாவில் 14,000 முதல் 18,000 தீவிரவாதிகளை அந்த அமைப்பு கொண்டுள்ளதாக ஐ.நா தெரிவிக்கிறது. -BBC_Tamil