மியான்மரில் ராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

மியான்மரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது கிளர்ச்சிக் குழுவினர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்தும் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதன்பின்னரும் அரகான் ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவானது, ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை மிராக் யு பகுதியிலும், வெள்ளிக்கிழமை கியாக்டாவ் பகுதியிலும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மிராக் யு நகருக்குள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்றபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள வீடுகளுக்குள் பதுங்கியிருந்து கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

-athirvu.in