பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற மர்ம கும்பல்; பயங்கர சம்பவத்தால் அதிரும் உலகம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல், கராச்சி-கவாதர் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டது. ஆர்மரா பகுதியில் ஒரு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர். பின்னர் 16 பேரை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் துடிதுடித்து இறந்தனர்.

2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள், அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ஆயுதக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த படுகொலையின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

-athirvu.in