புதிய மலேசியா வரும் ஆனால், அது ஒரே நாளில் வந்துவிடாது- வான் அசிசா

மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் புதிய மலேசியாவை உருவாக்க வேண்டும். அதை உருவாக்க நாளாகும், அதை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.

“மலேசியா பாரு என்றால் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதாகும். மலேசியர் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து உருவாக்க வேண்டிய ஒன்றுதான் மலேசியா பாரு.

“எல்லாவகை இன, சமய தீவிரவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். இதுவே நமது மலேசியாவுக்கான சூத்திரம். இந்தச் சூத்திரம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்”, என நாளைய விசாகத் திருநாளுக்காக விடுத்த வாழ்த்துச் செய்தியில் வான் அசிசா கூறினார்.

பொதுவான நன்மைக்காக மலேசியர் அனைவரும் அவர்களின் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட துணைப் பிரதமர் பெளத்த சமூகத்தினருக்கு விசாக தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.