சிரியாவில் கடும் மோதல் – 21 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு சவாலாக உள்ளனர்.

இத்லிப் மாகாணத்தில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அதன் அண்டை மாகாணங்களிலும் கால் பதிக்க முயற்சித்து வருகின்றனர். ர‌ஷியா மற்றும் ஈரான் படைகளின் உதவியோடு சிரிய ராணுவம் அவர்களுடன் போராடி வருகிறது.

இந்த நிலையில் இத்லிப் மாகாணத்தின் அருகே உள்ள ஹமா மாகாணத்தின் ஜிபீன் நகரில் அரசு படை வீரர்களுக்கும், ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசினர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான சண்டை நடந்தது.

இதில் ராணுவ வீரர்கள் 21 பேர் பலியாகினர். அதே போல் பயங்கரவாதிகள் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

-http://eelamnews.co.uk