எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு நாம் காரணமல்ல – ஈரான் மறுப்பு!

ஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் நாட்டு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் கூறியுள்ளது.

-eelamnews.co.uk