சீனா-ரஷ்யா கூட்டாக சர்ச்சைக்குரிய பகுதியில் விமான ரோந்து: பதிலடியாக விமானம் அனுப்பிய தென்கொரியா

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது ரஷ்யா. இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமான அனுப்பியது தென்கொரியா.

ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானங்கள் எல்லை மீறிப் பறந்தபோது தங்கள் சண்டை விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) சுட்டு எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளது தென் கொரியா.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்குமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது ஜப்பான்.

நடந்ததாக சொல்லப்படும் இந்த அத்துமீறல், சர்ச்சைக்குரிய டோக்டோ/டகேஷிமா தீவுகளுக்கு மேல் நடந்துள்ளது. இந்தத் தீவுகள் தென் கொரிய ஆக்கிரமிப்பில் உள்ளவை. ஆனால், இவற்றுக்கு ஜப்பான் உரிமை கோரிவருகிறது.

கொரிய வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (காடிஸ்) செவ்வாய்க்கிழமை காலை ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் நுழைந்ததாகத் தெரிவித்துள்ள தென்கொரியா, வெவ்வேறு ஏ-50 ரக ரஷ்ய விமானங்கள் இரு முறை அந்தத் தீவுகளுக்கு மேல் தங்கள் வான் பரப்பில் அத்துமீறியதாகவும் கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த மண்டலத்தில் சமீப ஆண்டுகளில் ரஷ்ய, சீன குண்டு வீசும் விமானங்களும், உளவு விமானங்களும் அவ்வப்போது தற்செயலாக நுழைந்துள்ளன. ஆனால், ரஷ்யாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. -BBC_Tamil