ரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு ஏவுகணை சோதனை

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணை பரிசோதனை பல விதமான கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பி உள்ளது.

அண்மையில் ஏவுகணையின் என்ஜின் வெடித்ததில் ஐந்து ரஷ்ய அணு விஞ்ஞானிகள் பலியானார்கள். அவர்களின் உடல், மாஸ்கோவிலிருந்து கிழக்கே 373 கி.மீ தொலைவில், அணு ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் சரோவ் பகுதியில் புதைக்கப்பட்டது.

அணு சக்தி என்ஜினை சோதனை செய்தோம் என்கிறது ரஷ்ய அரசு அணு முகமை. ஆனால், இதற்கு மேல் அவர்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

இந்த சோதனையானது ஆர்க்டிக் பெருங்கடலில் நடந்துள்ளது.

ரஷ்யா முன்னரே கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால், கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது எது மாதிரியான அணு சக்தி பொறி என்பதை அவர்கள் விளக்கவில்லை.

ஏவுகணை விபத்துக்குள்ளாகி வெடித்த சில நிமிடங்களிலேயே நாற்பது நிமிடங்களுக்கு அணு கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியானது ஏவுகணை சோதனை செய்யப்பட்ட ஒயிட் கடல் பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஆனால் நோய் ஏற்படுத்தும் அளவுக்கு அணு கதிர்வீச்சு உயரவில்லை என்கிறார்கள் அம்மக்கள்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பொறியாளர்கள் ரோஸடாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். -BBC_Tamil