பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் உதவியாளருக்குக் கடித உறைக்குள் கூரான ஆயுயமொன்றை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத ஒருவர் அதை அனுப்பியுள்ளார். அந்த உதவியாளர் ஜாவி-எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இச்சம்பவம் அதனுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

42-வயது நிரம்பிய அந்த உதவியாளர் நேற்று மாலை 5.15க்கு அச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹமட் ட்ஸாபிர் முகம்மட் யூசுப் கூறினார்.

இதற்குமுன் அந்த உதவியாளர் அப்படிப்பட்ட மிரட்டல் எதையும் பெற்றதில்லை என்றாரவர்.

“குற்ற நோக்கில் ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பதால் போலீசார் குற்றவியல் சட்டம் பகுதி507-இன்கீழ் விசாரணை செய்கிறார்கள்.

“பொதுமக்களுக்கு இதன் தொடர்பில் ஏதும் தகவல் தெரிந்தால் அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி முகம்மட் பாக்ருல் அஃபிபியுடன் தொடர்பு கொள்ளலாம் அவரது தொலைபேசி எண் 014-3700870”, என்று அஹமட் ட்ஸாப்பிர் கூறினார்.