பாலியல் பலாத்காரம் குறித்து குற்றஞ்சாட்டிய பெண் விசாரணைக்குத் தயாராகிவிட்டார்- தூதரகப் பேச்சாளர்

பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்திய 23-வயது இந்தோனேசிய பணிப்பெண், வழக்கு தொடங்கும்போது நீதிமன்றம் வந்து சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறாராம்.

இந்தோனேசிய தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் இன்று காலை பால் யோங் குற்றஞ்சாட்டப்பட்ட ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

அச்சம்பவத்தினால் கடும் துன்பத்துக்கு உள்ளான அப்பெண் இப்போது தேறிவருவதாக ஷாப்டா தியான் கூறினார்.

“அவரது மனநிலை சீரடைந்து வருகிறது. வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் திடத்துடன் உள்ளார்”, என்றவர் அஸ்ட்ரோ அவானியிடம் தெரிவித்தார்.