பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் தேவைதானா? -வீ

மசீச தலைவர் வீ கா சியோங், தொடக்கநிலைப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்தானா என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆண்டுக்கு 200 நாள்கள் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2.7 மில்லியன் மாணவர்களுக்குக் காலை உணவளிக்க சுமார் ரிம1.6 பில்லியன் செலவாகும் எனக் கணக்கிடுகிறார் வீ.

“இந்தத் தொகையைக் கொண்டு வறுமையில் வாடும் குடியானவர்களுக்குக் உதவுவது அல்லது வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு கட்டுப்படி விலை வீடுகள் கட்டித்தருவது நன்றாக இருக்குமே ”, என்றவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துவரும் வேளையில் இப்படியொரு திட்டம் தேவைதானா என்று ஆயர் ஈத்தாம் எம்பியான வீ வினவினார்.

ஆனால், பார்டி சோசலிஸ் மலேசியா கட்சி துணைத் தலைவர் எஸ்.அருள்செல்வன் இலவச காலை உணவுத் திட்டத்தை வரவேற்கிறார்.

“பிஎஸ்எம்-மைப் பொறுத்தவரை இது ஹரப்பான் அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒரு நல்ல திட்டம். கல்வி அமைச்சு இலவச உணவு வழங்குவதுடன் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வேறு சிலவற்றையும் கற்பிக்கலாம்”, என்றாரவர்.

மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவத்தையும் உணவை வீணாக்காமல் இருக்கும் பழக்கத்தையும் கற்பிக்கலாம்.

உணவைத் தேர்ந்தெடுப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பல்வேறு இனத்தவரின் உணவுவகைகளை உண்பது ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் என்றாரவர்.