கொரோனா : இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் எல்லையில் நிறுத்தம்

இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வியன்னா: கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கிறார். மேலும், 152 பேருக்கு வைரஸ் பரவி இருப்பதை இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் வெனிசில் இருந்து ரெயில் ஒன்று அண்டைநாடான ஆஸ்திரியா நாட்டின் முனிச் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அதில் இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ரெயிலை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது.

மேலும், வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலியின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து போக்குவரத்து சேவைகளையும் துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

maalaimalar