கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 3169 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது.

பீஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மேலும் 11 பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3169 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,793 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஜனவரி மாதத்திற்கு பிறகு இறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. உகான் நகரில் நேற்று புதிதாக 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு, உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

maalaimalar