கோவிட்-19: 153 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 113 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

கோவிட்-19 நோய்த்தொற்றினால் இன்று 153 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வரை மொத்தம் 4,683 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று மேலும் மூன்று நோயாளிகள் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது.

113 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 2,108, அல்லது 45 சதவீதமாக கொண்டு வருகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 66 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 72 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.

நேற்று 39 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, இன்று 37 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

இன்று இறந்த மூன்று நோயாளிகள்:

‘நோயாளி 4,531’ (74-வது இறப்பு)

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் வரலாறு கொண்ட 54 வயதான மலேசிய நபர். ஏப்ரல் 11ஆம் தேதி நெகிரி செம்பிலனில் உள்ள துவாங்கு ஜாஃபர் சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இன்று அதிகாலை 1.50 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 3,469’ (75-வது இறப்பு)

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வரலாறு கொண்ட 90 வயதான மலேசிய நபர். ஏப்ரல் 1ம் தேதி பேராக் தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 5.23 மணிக்கு இறந்துவிட்டார்.

‘நோயாளி 4,314’ (76-வது இறப்பு)

47 வயதுடைய மலேசிய பெண். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர். ஏப்ரல் 8ஆம் தேதி சரவாக் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை 7.36 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.