நாட்டின் பிரதமருக்கே கொரோனா – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

ரஷிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாஸ்கோ: ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கும் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 வயது நிரம்பிய மிக்கைல் கடந்த ஜனவரி 16-ம் தேதி தான் ரஷியாவின் பிரதமராக பதவியேற்றார்.

வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து மிக்கைல் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டார்.

வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தி கொண்டாலும் அரசின் கொள்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் சமயங்களில் வீடியோ கான்பிரஸ் மூலம் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொரோனா பரவிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் வைரசில் இருந்து விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர்  மிக்கைல் குணமடையும் வரை அவரது பணிகளை துணை பிரதமர் அண்ரீ பிலோசோவ் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமருக்கே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரஷிய மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

malaimalar