அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

வாஷிங்டன்; அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.

1939 ஆம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்புத் தகவல்களைக் கணக்கிட்டு வரும் அந்த அமைப்பு, இப்போது ஏற்பட்டுள்ளது திடீர் மற்றும் மிகப்பெரிய வீழ்ச்சி எனத் தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின்போது 87 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதைவிட இருமடங்குக்கு மேல் இப்போது வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் இரண்டு கோடியே 28 லட்சம் வேலைவாய்ப்பு உருவான நிலையில், அந்த முன்னேற்றத்தைக் கொரோனாவால் வந்த ஊரடங்கு துடைத்தெறிந்துவிட்டது.

இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 14.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.

dailythanthi