சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தவறான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்ததை டுவிட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், தங்கள் குரல்களை சமூக ஊடகங்கள் முடக்கப் பார்ப்பதாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளங்களில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.

அதேசமயம் இந்த செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

malaimalar