“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்” – டிரம்ப்

உலக சுகாதார நிறுவனத்துடனான அமெரிக்காவின் உறவை துண்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமி பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவை பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனாவை தண்டிக்கும் நோக்கத்தோடு கூடிய அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய டிரம்ப், “உலக சுகாதார நிறுவனம் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணவுள்ள டிரம்ப், கொரோனா கிருமி பரவலை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படவில்லை என்று உள்நாட்டிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், டிரம்போ நோய்த்தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

BBC.TAMIL