முடிதிருத்தும் நிலையம், இரவு சந்தை கடுமையான SOP உடன் மீண்டும் திறக்க அனுமதி

முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

இதேபோல், ஜூன் 15 முதல் இரவு சந்தைகள், பஜார் மற்றும் திறந்த சந்தை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றார்.

இது குறித்து கவலைகள் இருக்கலாம் என்று இஸ்மாயில் ஒப்புக் கொண்ட போதிலும், கடுமையான நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகள் (SOP) அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.

கோவிட்-19க்கு அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அவர்கள் தலைமுடியை வெட்டுவதற்கு முன் கடைக்காரரிடம் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும்.

இதற்கிடையில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முடி வெட்டும் போது, பெற்றோர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் முகக்கவரியையும் ஏப்ரனையும் அணிய வேண்டும்.

ஒரு வாடிக்கையாளருக்குப் பயன்படுத்திய துண்டுகளை மீண்டும் மற்ற வாடிக்கையாளருக்கு பயன்படுத்தவும் அனுமதி இல்லை என்று இஸ்மாயில் கூறினார்.

நாற்காலியையும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்திற்கு பிரிக்க வேண்டும், என்றார்.

இதற்கிடையில், காலை சந்தை, காலை 6 மணி முதல் 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும், இரவு சந்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படக்கூடும்.

SOPகளில் ஒவ்வொரு கடைக்கும் இடையில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.

உணவு விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல மட்டுமே உணவை விற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

அனைத்து விற்பனையாளர்களும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), கையுறைகள் மற்றும் முகக்கவரிகளை அணிய வேண்டும்.

அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் MySejahtera பயன்பாட்டைப் பயன்படுத்துவது கட்டாயமாகும் என்றும் இஸ்மாயில் கூறினார்.