பிரிட்டனில் 5 பவுண்ட் செலவில் கொரோனா மரணங்களை தடுக்கும் மருந்து: விஞ்ஞானிகள் அசத்தல்

லண்டன்: பிரிட்டனில் கொரோனா மரணங்களை 5 பவுண்ட் செலவில் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பல நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துவிட்டனர். பெரும்பாலான நாடுகளில் உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். பல மருந்துகள் சோதனை முயற்சியாகத் தான் இன்றளவும் உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் 5 பவுண்ட் செலவில் அதாவது இந்திய மதிப்பில் 500 ரூபாய் செலவில் கொரோனாவுக்கான மருந்தினை அந்நாட்டு தேசிய சுகாதார சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

சாதாரண ஸ்டிராய்டு வகை மருந்தாகிய ‘டெக்சாமிதாசோன்’ கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது. இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது.

‘டெக்ஸசமிதாசோன்’ எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், அலர்ஜிக்கும் பயன்படக் கூடியது. அதுவும் 5 பவுண்ட் செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் இம்மருந்தினை சோதித்து பார்த்தனர். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுபவர்களில் 8 ல் 3 பேர் உயிரிழந்த நிலையில் இம்மருந்தின் பயன்பாட்டிற்கு பிறகு 2 பேர் மட்டுமே உயிரிழந்ததை கண்டுபிடித்தனர். இம்மருந்து ஊசியாக செலுத்தப்படும் போதும் இறப்பு விகிதம் 5ல் ஒரு பங்காக குறைந்தது.

அரசு அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில்,’ இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம், நமது விஞ்ஞானிகள் நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது’ இவ்வாறு அவர் கூறினார்

இது குறித்து தேசிய சுகாதார சேவையின் ஸ்டீபன் கூறுகையில் இது நல்ல மாற்றம், கொரோனா நோயாளிகளை பிரிட்டனில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும். வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது. பல ஆண்டுகளாகும் என்றும் இருந்த நிலையில் மிக விரைவாக நல்ல தீர்வு கிடைத்துள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar