உள்ளூர் பாதிப்பு ஏதும் இல்லை

மார்ச் 2க்குப் பிறகு முதல் முறையாக இன்று மலேசியாவில் புதிய தொற்றுநோய்களின் பாதிப்புகள் ஏதும் பதிவாகாதது மனநிறைவளிக்கும்படியாக அமைந்துள்ளது.

இன்று மதியம் நிலவரப்படி, வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய கோவிட்-19 பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.

அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் விளைவாக பதிவு செய்யப்பட்ட மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 8,640 ஆக உள்ளது.

இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மேலும் 21 பேர் மீண்டு வந்துள்ளதாகக் கூறினார். இது குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையை 8,375 ஆகக் கொண்டு வந்துள்ளது.

இந்த வளர்ச்சியின் விளைவாக மலேசியாவில் இப்போது மொத்தம் 144 கோவிட்-19 பாதிப்புகள் செயலில் உள்ளன.

நான்கு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் இருவர்களுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

தொடர்ந்து 13வது நாளாக, புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121 என்றும் நூர் ஹிஷாம் இன்று அறிவித்துள்ளார்.