வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆம் தேதி வரை தடை

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் முஹைதீன் யாசின் கட்டுப்பாடுகள் குறித்து கூறியதாவது: “உலகின் பிற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது.

இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன” என்றார்.

malaimalar