சீன உதிரிபாகங்களுக்கு அமெரிக்கா வரி முன்னணி கார் நிறுவனங்கள் எதிர்த்து வழக்கு

உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2018-ம் ஆண்டு தொடங்கிய வர்த்தகப்போர் தொடர்கிறது.

வாஷிங்டன், உலகின் இரு பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே 2018-ம் ஆண்டு தொடங்கிய வர்த்தகப்போர் தொடர்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரிகள் விதித்து வருகின்றன. இதனால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் சுங்க வரிகளை அறிமுகம் செய்துள்ளது.

இது அங்குள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான டெஸ்லா, வோல்வோ, போர்டு மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகியவற்றுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அந்த கார் நிறுவனங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளன.

இதுபற்றி டெஸ்லா கார் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “இந்த வரிவிதிப்பு தன்னிச்சையானது, விரிவானது, துரோகமானது” என காட்டமாக கூறியது.

இந்த நிறுவனத்தின் அதிபரான எலோன் மஸ்க், இறக்குமதி வரிகளை டிரம்ப் நிர்வாகம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது

dailythanthi