கோவிட் 19 : இன்று 972 புதியத் தொற்றுகள், இரண்டாவது இடத்தில் நெகிரி செம்பிலான்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 972 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 8 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில் 38 விழுக்காடு சபாவிலும், 26 விழுக்காடு நெகிரி செம்பிலானிலும் 17 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 1,345 நோயாளிகள் குணமடைந்த வேளை, சபாவில் 7 இறப்புகளும் லாபுவானில் ஒன்றும் நேர்ந்துள்ளன என்று டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.

ஆக, இதுவரையில் நாட்டில் 294 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். மரணம் அடைந்தவர்களில் 159 பேர் சபாவைச் சேர்ந்தவர்கள், இது மரண எண்ணிக்கையில் 53 விழுக்காடு ஆகும்

370 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 260, சிலாங்கூரில் 137, லாபுவானில் 63, பேராக்கில் 51, கோலாலம்பூரில் 20, கெடா மற்றும் ஜொகூரில் 8, மலாக்காவில் 5, புத்ராஜெயாவில் 4 மற்றும் கிளந்தானில் 2.

மேலும் இன்று, 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

அவை, பெரிகி திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், நஹாபா திரளை – சபா, கோத்த பெலோட் மாவட்டம், தெராப்பி திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம் & மலாக்கா, அலோர் காஜா மாவட்டம், பாடாங் திரளை – ஜொகூர், கோத்தா திங்கி மாவட்டம், ஹர்மோனி திரளை – புத்ராஜெயா, நும்பாக் திரளை – சபா, கோத்தா கினாபாலு மாவட்டம்