கோவிட் 19 : இன்று 919 புதியத் தொற்றுகள், நெகிரி செம்பிலானில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பு

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 919 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 996 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, சபா, தவாவ் மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் 66 வயது முதியவர். சபாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இப்போது 165-ஆக உள்ளது, இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் (303), 54.5 விழுக்காடு.

திரெங்கானு, பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 35 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

கோலாலம்பூரும் புத்ராஜெயாவும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

319 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

நெகிரி செம்பிலானில், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை, இரண்டாவது நாளாக 200-ஐ தாண்டின, இன்று 240 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சபா மற்றும் நெகிரி செம்பிலானை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 174, கோலாலம்பூரில் 49, லாபுவானில் 35, பேராக்கில் 9, மலாக்கா, சரவாக் மற்றும் ஜொகூரில் 8, கெடாவில் 3, கிளந்தானில் 2 மற்றும் புத்ராஜெயாவில் 1.

மேலும் இன்று, சபா, கோத்தா கினாபாலு மாவட்டத்தில் புதிதாகத் தெலுக் திரளை கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.