ரஷிய தடுப்பூசியை பெற பல நாடுகள் விருப்பம் – அதிபர் புதின் தகவல்

ரஷிய தடுப்பூசியை பெற பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ, உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பல நாடுகளில் பரிசோதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாஸ்கோவில் இருந்தவாறு, வியட்னாம் நடத்திய கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் டஜன் கணக்கிலான நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெறவும், கூட்டாக தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, கொரோனா பரிசோதனை முறைகளை கூட்டாளிகளுக்கு இலவசமாக வழங்கி ஒத்துழைக்க ரஷியா தயாராக இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

dailythanthi