கோவிட் 19 : இன்று 1,210 புதியத் தொற்றுகள், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சபாவில் அதிக பாதிப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,210 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,018 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில் பெரும்பாலும் கிள்ளான் பள்ளத்தாக்கு (42.8 %) மற்றும் சபாவில் (41.2 %) பதிவாகியுள்ளன.

நூர் ஹிஷாம் இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை, அதற்கு பதிலாக கோவிட் -19 தொற்றின் சமீபத்திய தரவுகளை மாலை 6.30 மணிக்கு ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

இன்று, இத்தொற்றுக்கு ஐவர் பலியாயினர், அனைவரும் சபாவைச் சேர்ந்தவர்கள். சபாவில் இதுவரை கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 180-ஆக அதிகரித்துள்ளது, இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் (318), 56.6 விழுக்காடு ஆகும்.

பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 40 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

499 புதிய சம்பவங்களுடன், சபா அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 271, கோலாலம்பூரில் 245, நெகிரி செம்பிலானில் 67, பேராக்கில் 47, பினாங்கில் 33, கிளந்தானில் 19, ஜொகூரில் 14, கெடாவில் 8, மலாக்கா மற்றும் புத்ராஜெயாவில் தலா 2, லாபுவானில், சரவாக் மற்றும் திரெங்கானுவில் தலா 1.

மேலும் இன்று, 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.