சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்

ஜான் கெர்ரி

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. பதிலடியாக இதேபோன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் வர்த்தக போர் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தோற்றம், பரவல் பற்றிய உண்மையான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைத்து விட்டது. இதில் உலக சுகாதார நிறுவனமும் துணை போய் இருக்கிறது என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

இப்போது பருவநிலை மாற்றம், மிகப்பெரிய பிரச்சினையாக பூதாகரமாகி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் முதன்முதலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவுடனான உறவு பற்றிய திட்டவட்டமாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

சில முக்கிய விஷயங்களில் சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாகவும், செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய நிலையில், அமெரிக்காவின் அறிவு-சார் சொத்துக்களை சீனா திருடுவதுபற்றியும், தென் சீனக்கடல் விவகாரம் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் எல்லோருமே இதை அறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒன்றுக்காகவும், இதெல்லாம் மாற்றப்போவதில்லை. பருவ நிலை மாற்ற பிரச்சினையில் உடன்பாடு ஏற்படுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை.

ஆனால் பருவநிலை மாற்றம், மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இதில் உலகின் 30 சதவீத கார்பன் கழிவுகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்கா 15 சதவீத கார்பன் கழிவுகளை மட்டுமே வெளியிடுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் சேரும்போது முத்தரப்பும் சேர்த்து 55 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் கழிவுகளை வெளியிடுகின்றன.

எனவே நாம் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பது அவசரம் ஆகும். நாம் காத்திருந்து பார்ப்போம்.

ஆனால் சீனாவுடனான மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியம் குறித்து ஜோ பைடன் மிக தெளிவாக இருக்கிறார். இதில் சிலர் கவலைப்பட்டது எனக்கு தெரியும். ஒன்றுக்காக மற்றொன்றை செய்து விட முடியாது.

பருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில் அது உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சினைகள் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க முடியாது. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த வார்த்தைகளை எளிதாக பயன்படுத்துகிறோம். பின் விட்டுவிடுகிறோம். ஆனால் உலகளாவிய ஒரு பிரச்சினைக்கு முன்பாக நாம் மிகப்பெரிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை ஜோ பைடன் முற்றிலும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் நாம் மீண்டும் சேருவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இவ்வளவு விரைவாக அதில் அவர் சேருவதில் காரணம் இருக்கிறது. இது அவசரமான பிரச்சினை ஆகும்.

நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்ற உச்சி மாநாடுதான், உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் விளைவுகளை முறிடியப்பதற்கு கடைசி சிறந்த வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

malaimalar