மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: நள்ளிரவில் இணைய சேவை முடக்கம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் சாலைகளில் தென்பட்டன.

யாங்கூன், மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1-ந் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ‘போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில நாட்களாகவே மியான்மரின் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டக்காரகளை ஒடுக்கத் தயாராகும் விதத்தில், மியான்மரின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் சாலைகளில் தென்பட்டன. உள்ளூர் நேரப்படி,  நள்ளிரவு ஒரு மணி முதல் கிட்டத்தட்ட நாடுமுழுவதும் முழுமையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.00 மணி முதல் காலை 9.00 மணி வரை, மியான்மரின் இணைய சேவைகளைத் துண்டிக்க வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. மியான்மரில் இந்த இணையத் தடைக்குப் பிறகு, வழக்கமாக இணைய சேவையைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் வெறும் 14% தான் இருப்பதாக, நெட்பிளாக் என்கிற கண்காணிப்புக் குழு ஒன்று கூறுகிறது

dailythanthi