போராடினால் 20 ஆண்டு சிறை: எச்சரிக்கும் மியான்மர் ராணுவம்

நேபிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சன் சூச்சி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோர், வீட்டு காவலில் சிறைபிடிக்கப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மியான்மர் ராணுவம் தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

dailythanthi