வங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தற்போது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் இருந்து வசன் சேஸ் தீவுப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ரோஹிஞ்சா அகதிகள் அடிக்கடி இடம் மாற்றப்படுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியான்மர் நாட்டில் இருந்து இந்த அகதிகள் வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தீவுக்கு கடந்த திங்களன்று இடம் மாற்றப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் அகதிகள் தங்கும் இடவசதி கொண்ட இந்த தீவில் தற்போது 7 ஆயிரம் அகதிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்முதல் இந்த இடமாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடற்கரை நகரமான காக்ஸ் பஜார் பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அகதிகள் முகாம்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இவர்களது நலன் கருதியே இந்தத் தீவு உருவாக்கப்பட்டது என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அகதிகளுக்கு மீண்டும் அந்நாட்டில் இடமளிக்க தாங்கள் வலியுறுத்த உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. தற்போது வங்காள விரிகுடாவில் உள்ள அகதிகள் தீவு மனிதர்கள் அற்ற பகுதியாக இருந்தது. அடிக்கடி மழை காரணமாக இந்தத் தீவு மூழ்கியது. தற்போது கடல் நீர் ஊருக்குள் புகாமல் இருக்க சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டு இது ஒரு பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்த முயற்சி உலக அளவில் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது

dailythanthi