ஒன்றல்ல… இரண்டல்ல… ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

மாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் ஏழு குழந்தைகள் உள்ளன என்று டாக்டர்கள் கூறிய நிலையில், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும் உருவாகும் நிகழ்வும் நடந்துள்ளது.

இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு கருவில் 9 குழந்தைகள் உருவாகி, தற்போது அறுவை சிகிச்சை மூலம் 9 குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

அவர் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்களுக்கு ஆச்சர்யத்துடன் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்… கருவில் ஏழு குழந்தைகள் உருவாகியிருந்தது தெரிவந்தது.

இதனால் ஹலிமா சிஸ் என்ற 25 வயதான அந்த இளம் பெண்ணுக்கு ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்க டாக்டர்கள் முக்கிய கவனம் செலுத்தினர். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறப்பதற்கும், இந்த பெண்ணின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் மொரோக்கோவிற்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்க்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அரசு தலையிட்டு அந்த பெண்ணை மொரோக்கோவிற்கு அழைத்து சென்றது. இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அப்போது டாக்டர்களுக்கு பேரின்ப அதிர்ச்சி. அவரது கருப்பையில் 9 குழந்தைகள் இருந்தன. 9 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.

இதில் நான்கு ஆண் குழந்தைகளும், ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். 9 குழந்தைகள் என்பதாலும், குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு கடினம் என்பதாலும் பல நாட்கள் மொரோக்கோவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், மாலி திரும்ப இருக்கிறார்.

maalaimalar