இன்று 4,446 புதிய நேர்வுகள், 45 மரணங்கள்

கோவிட் 19 | நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்த நிலையில், நாட்டில் இன்று புதிதாக 4,446 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

201 புதிய நேர்வுகளுடன் திரெங்கானுவில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிய நேர்வுகளில் பெரும்பகுதி இன்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து (44 விழுக்காடு) வந்துள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக்கும் ஜொகூரும் அதிக பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், இன்று 45 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,947 பேர் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூரில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர், கோலாலம்பூர் (4), கிளந்தான் (4), கெடா (3), பேராக் (3), ஜொகூர் (3), நெகிரி செம்பிலான் (2), மலாக்கா (2), பஹாங் (1), பினாங்கு (1), சரவாக் (1) மற்றும் சபா (1).

இன்று 2,784 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 273 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானிலும் பெர்லிஸிலும் இன்று புதிய நேர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,650), சரவாக் (433), ஜொகூர் (391), கிளந்தான் (343), கோலாலம்பூர் (297), நெகிரி செம்பிலான் (243), கெடா (236), பேராக் (203), திரெங்கானு (201), பினாங்கு (159), பஹாங் (139), மலாக்கா (80), சபா (60), புத்ராஜெயா (11).

மேலும் இன்று, 14 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.