ஜெனீவா-பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது:பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. அங்கு ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையின சிறுமியரை கடத்தி, பாலியல் கொடுமை செய்து, கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வது, அரசின் ஆதரவுடன் நடக்கிறது.
கடந்த ஓராண்டில், 1,000த்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின சிறுமியர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமண பந்தத்தில் தள்ளப்படுகின்றனர். சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் சூறையாடப்படுகின்றன. இந்த கொடுமைகளுக்கு பாக்., அரசு துணை போகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட பாக்., அனுமதிக்கிறது. அதனால், சிறுபான்மையினர் மீதான கொடுமைகளுக்கும், பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், பாக்., அரசை, உலக நாடுகள் பொறுப்பேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
dinamalar