உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: அதிவிரைவாக பரவும், ‘டெல்டா’ போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, 98 நாடுகளில் பரவி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும்.

துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும்.

குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar