3 மாநிலங்கள் 3-ஆம் கட்டப் பிபிஎன்-க்கு நகர்கின்றன

ஆகஸ்ட் 4-ம் தேதி முதல், மூன்று மாநிலங்கள் தேசிய மறுவாழ்வு திட்டத்தின் (பிபிஎன்), 3-வது கட்டத்திற்கு நகரும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.

அவை பெர்லிஸ், சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்களும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசமும் ஆகும்.

“மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டிய மூன்று மாநிலங்கள், ஆகஸ்ட் 4, 2021 புதன்கிழமை தொடங்கி, பிபிஎன்-இன் 3-ஆம் கட்டத்திற்கு நகரும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

“வாழ்த்துக்கள். அமைக்கப்பட்ட எஸ்.ஓ.பி.கள் மற்றும் விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் தொற்றுநோய் நிலைமையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்கின்றன என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

“நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், மேலும் பல மாநிலங்கள் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் ஒரு முகநூல் அறிக்கையில் கூறினார்.